திண்டுக்கல்: அடுத்த கல்வியாண்டு பாடத் திட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வரலாறு சேர்க்கப்படும் என தமிழக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி தெரிவித்தார். திண்டுக்கல் முருகபவனத்திலுள்ள பாடநூல் கழக கிட்டங்கியில் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் ஐ.லியோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3.56 கோடி புத்தகங்கள் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலவசப் பாடப் புத்தகங்களுடன், 11 வகையான கல்வி உப கரணங்களும் வழங்கப்படும்.
6 முதல் பிளஸ் 2வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சத வீத ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு பிரதி மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன் வர வேண்டும். நடப்பாண்டில் 9-ம் வகுப்பில் திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அடுத்த கல்வி ஆண்டில் (2024-25) அவரது முழுமையான வாழ்க்கை வரலாற்றைப் பாடத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.