தமிழகம்

பெண்ணின் புகைப்படத்தை தவறாக பதிவிட்டவர் கைது: கோவை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோவை: பெண்ணின் புகைப்படத்தை தவறாக பதிவிட்டவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளி்த்தார். அதில், ‘‘கடந்த மாதம் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் புகைப்படங்களை தவறாக மார்பிங் செய்து, புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், எனது தந்தையின் ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப் பட்டிருந்தது.

அதன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் (22) என்பவர் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சய்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், சிம்கார்டு, பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT