சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை (மே 28) திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், குடியரசு தலைவரையும், துணை குடியரசு தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இவ்விழாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தன. ஆனால், அதிமுக இந்நிகழ்வில் பங்கேற்கும் என தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.