சென்னை: ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் 7 மண்டலங்களில் நாளை (மே 28) காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 700 மிமீ விட்டமுள்ள உந்து குழாயுடன், மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள (சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப். சந்திப்பில்) போரூர் குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து செல்லும் 1500 மிமீ விட்டமுள்ள பிரதான குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (மே 28) காலை 6 மணி முதல் 29-ம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும்அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள்மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்குக் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.