தமிழகம்

நெல்லை தீக்குளிப்பு சம்பவம்: தாயும் இரண்டு குழந்தைகளும் பலி

செய்திப்பிரிவு

நெல்லையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார்.

முன்னதாக, தீக்குளிப்பு சம்பவம் குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, "என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு இன்று மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரேப் பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தீக்குளித்த 4 பேரில் 3 பேர் பலியாகினர்.

SCROLL FOR NEXT