சேலம்: சேலத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்பட கட்சி நிர்வாகிகள் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக வந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராசரத்தினம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ்வழக்கு விசா ரணையை வரும் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.