சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு. அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் திட்டத்துக்கும், வணிக விரிவாக்கத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
நிதியுதவி மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாக தொழில் வணிக மண்டல இணை இயக்குநர் அலுவலகம் செயல்படும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 23-ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. விருப்பமுள்ள எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு தொழில் முனைவோர், இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெறவும் ஏ-30 சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி என்ற முகவரியில் அமைந்த தொழில் மற்றும் வணிக மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 90030 84478, 9444114723 என்ற கைபேசி எண் வழியாக அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.