தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் கைம் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, அவர்களின் அவசர நிதி தேவைகளுக்கும் மற்றும் தையல் கடை, இட்லி கடை, காய்கறி கடை, பழக்கடை, மீன்கடை, பூக்கடை, பால்கடை, துணி வியாபாரம், கூடை முடைதல் போன்ற சிறு தொழில்களுக்கு கடனாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 310 பேருக்கு ரூ.57 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடன் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை 120 நாட்களில் இருந்து 350 நாட்களாக நீட்டித்தும் கூட்டுறவு சங்க பதிவாளரால் ஆணைவழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தனிநபர் பிணையத்தின் பேரில் வழங்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த கடன் பெற ஏதுவாக ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டுநகல், நிரந்தர சேமிப்பு கணக்கு அட்டை நகல், வருமானச் சான்று, கடன்தாரர் வியாபாரம் செய்யும் இடத்துக்கான ஆதாரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை நேரில் அணுகி பயன்பெறலாம்.