தமிழகம்

தமிழக குழந்தைகள் அறிவு, திடத்துடன் வளர ஊட்டச்சத்தை உறுதி செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக - திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: கடந்த 2021- ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற இரு மாதங்களில்சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தை ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தேன்.

தொடர்ந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் எனக்கு மனவேதனை அளித்தது. தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் வயதுக்கேற்ற எடை, உயரமில்லாமல் மெலிந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக குழந்தைகளை திடமானவர்களாக ஆக்கவேண்டும் என்ற உறுதியுடன் சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தை திமுக அரசு பொறுப்பேற்று 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் அறிவித்தேன்.

சில வாரங்களில், ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைத்தேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப். 28-ம் தேதி ஏற்றமிகு 7 திட்டங்களில் ஒன்றாக ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின்கீழ், 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1,11,216 குழந்தைகளுக்குச் சிறப்பு உணவாக ஆர்டியுஎப் உணவு அளிப்பதையும், 6 மாதத்துக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 11,917 குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதிசெய்ய தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்குவதையும் தொடங்கிவைத்தேன்.

இதன்படி ஊட்டச்சத்து உணவு,மருத்துவ உதவி வழங்கி இத்தகைய குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் சரவணன் சந்திரன் பதிவு செய்துள்ளார். இதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தமிழகத்தின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக - திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT