கோவை: கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் தங்கி பயின்றுவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் (23), கடந்த 16-ம் தேதி இரவு விடுதிக்கு திரும்பிவரும் வழியில் யானை தாக்கி உயிரிழந்தார். விஷால் ஸ்ரீமலின் இழப்பு சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுபற்றி மாணவர்கள் கூறும்போது, “விடுதியை சுற்றி புதர் நிறைந்து காணப்படுகிறது. செல்லும் வழியில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி காலை முதல் மதியம் வரை போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர்.