சென்னை: புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 87 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்து விட்ட நிலையில், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக காணொலி மூலம் பிரதமர் மோடி 1.3.2019-ல் அடிக்கல் நாட்டினார். புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயர ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலம் அமைய உள்ளது. தற்போது வரை 87 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி, அடித் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. செங்குத்து தூக்குப் பாலத்துக்கான பிளாட்ஃபார்மும் தயாராகி வருகிறது. அத்துடன் புதிய பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள கர்டர்கள் மீது தண்டவாளங்கள் பொருத்தம் பணி நடந்து வருகிறது. விரைவில், புதிய பாலத்தின் மத்தியில் தூக்குப் பாலம் அமைப்பதற்கான பணி தொடங்க உள்ளது.