விழுப்புரம்: விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகாவில் பாஜக மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக இது அமைந்துள்ளது. கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டும் கூட பாஜக மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது. இது கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல அகில இந்திய பாஜகவிற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கிற மரண அடி என்பது தான் உண்மை.
இமாச்சல பிரதேச தேர்தல், டில்லி மாநகராட்சி தேர்தல், சிம்லா மேயர் தேர்தல், தற்போது கர்நாடகா தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்விகளை பாஜக சந்தித்து வருகிறது. 2024-ம்ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல்கள் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
விழுப்புரத்தில் 16-ம் தேதி மாநாடு: சமூக ஒடுக்குமுறைகளை முறியடிப்போம், சாதியற்ற சமதர்ம சமூகத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் விழுப்புரத்தில் வரும் 16-ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அமைச்சர் பொன்முடி,
காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். குழந்தை திருமணம் செய்த புகாரில் சிதம்பரம் தீட்சிதர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தவறு என ஆளுநர் கூறுகிறார்.
இப்படி ஒரு ஆளுநரை இந்தியாவில் நாம் பார்த்தே இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஆளுநரை பதவி நீக்க வேண்டும், இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். தமிழக அமைச்சரவையில், தேவையின் அடிப்படையில் அமைச்சர்களை மாற்றி இருப்பது அவசியம். வாரிசு அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆடியோ விவகாரத்தால் நிதி அமைச்சரை மாற்றவில்லை. அது தொடர்பாக முதல்வரே விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர், ஏதேனும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து கொண்டு சொல்லக் கூடாது. கரும்பு விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக முதல்வரிடம் பேசியுள்ளோம் என்றார். பாஜகவுக்கு இது பெரிய தோல்வி. இந்திய அரசியலில் இது ஒரு திருப்புமுனை தேர்தல்.