தமிழகம்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பொருட்களுக்கான கண்காட்சி திறப்பு

இ.மணிகண்டன்

சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் இன்று திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரை இப்பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 2ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.

இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்றுவரும் 2ம் கட்ட அகழாய்விலும் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று அரங்கை திறந்து வைத்து தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

இக்கண்காட்சியில், வெம்பக்கோட்டை பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அகழாய்வு நடைபெறும் இடத்தை நேரடியாகப் பார்வையிடுவதோடு, இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்காலப் பொருள்களையும் அதன் சிறப்புகளையும் அறிந்துகொள்ளச் செய்யும் வகையில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, எம் எல் ஏக்கள் அசோகன் ரகுராமன், தொல்லியல் துறை இயக்குனர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT