நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவரகள் சரண், சிவப்பிரசாத். 
தமிழகம்

ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்தபோது இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரத்தில் ஓடையில் குளித்த போது இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பால்வண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் சரண்(13), 5-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் சரண், ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சிங்கராஜ் என்பவரது மகன் 4-ம் வகுப்பு படிக்கும் சிவபிரசாத் (10) மற்றும் மேலும் சில சிறுவர்களுடன் சேர்ந்து சரண் விளையாடி வந்துள்ளார்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக எஸ்.ராமலிங்காபுரம் அருகே சிவகாமியாபுரம் அரசு பள்ளி பின்புறம் உள்ள ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓடை நீர் கருங்குளம் கண்மாயில் இருந்து கீழராஜகுலராமன் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்கிறது.

இந்நிலையில் ஓடையில் குளிப்பதற்காக சரண், சிவபிரசாத் உள்ளிட்ட 5 சிறுவர்கள் சேர்ந்து சிவகாமியாபுரம் பள்ளி பின்புறம் உள்ள ஓடைக்கு சென்றனர். ஓடையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்ட சரண், சிவபிரசாத் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பகுதி மக்கள் ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்டனர். இதுகுறித்து தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT