தமிழகம்

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் 4 நாட்கள் மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (மே 7) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 6-ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால் அப்பகுதிகளில் வரும் 7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 6, 7)சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7, 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

மே 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் லக்கூரில் 16 செ.மீ., ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, கடலூர் மாவட்டம் வேப்பூரில் தலா 11 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 10 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வரும் 7, 8, 9-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடல் ஆகிய இடங்களில் மணிக்கு 45 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள்இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT