திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், பெரியகசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி(23). இவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது குழந்தைகளுடன் நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து அஸ்வினி கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘பிஎஸ்சி (கணிதம்) இளங்கலை பட்டம் பெற்ற எனக்கு படித்த படிப்புக்கு ஏற்ற பணி கிடைக்கவில்லை. இதற்கிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னையும், எனது குழந்தைகளையும் பிரிந்து சென்று விட்டார்.
இதனால், ஆதரவில்லாமல் தவித்த நான் எனது குழந்தை களுடன் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டேன். இதற் கிடையே, எனது கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை செய்து எனது 2 குழந்தைகளையும் காப்பாற்ற முடிவு செய்தேன். அதற்காக அடையாள அட்டை பெற பெரிய கசிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 6 மாதங் களுக்கு முன்பு விண்ணப்பம் அளித்தேன்.
ஆனால், எனது விண்ணப் பத்தை ஊராட்சி மன்றத் தலை வரின் கணவர் நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவரிடம் விளக்க கேட்க சென்ற போது அவர் பதிலளிக்கவில்லை. இதற் கிடையே, மே 1-ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில், நான் கலந்து கொண்டு, 100 நாள் வேலை செய்வதற்கான அடையாள அட்டை கேட்க முயன்றேன்.
அப்போது, அங்கிருந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், என்னை பலர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசினார். ஊராட்சி மன்ற பெண் தலைவரே அமைதியாக இருக்கும்போது, அவரது கணவர் பல பேர் முன்னிலையில் என்னை அவமானம் செய்யும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டார்.
எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து, அஸ்வினி வழங்கிய மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உறுதியளித்தார். இதையடுத்து, அவர் அங்கிருந்து குழந்தை களுடன் புறப்பட்டு சென்றார்.