தமிழகம்

கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: மாணவி, பெற்றோர் தரப்பு பிரதிநிதியை சேர்க்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் விரிவான கொள்கை வகுத்து, உள்விசாரணை குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான உள்விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறகூடாது என்றும், அக்குழுவில் மாணவிகள், பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளை சேர்க்க கோரியும் சென்னைஉயர் நீதிமன்றத்தில் 7 மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி நேற்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு: பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம்,பல்கலைக்கழக மானியக்குழுசட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் கீழ் பாலியல் தொல்லைகளை தடுக்க, கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்துவிசாரணை நடத்த கலாஷேத்ராஅறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணை குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளை சேர்க்கவேண்டும். அத்துடன் இந்த உள்விசாரணை குழுவில் யார் யார் உள்ளனர் என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக உள்ள ஆசிரியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. நிலுவையில் உள்ள இந்த வழக்கு, போலீஸ் விசாரணைக்கோ, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி கண்ணன் குழுவுக்கோ தடையாக இருக்காது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT