சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் திருச்சி மனோகரன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதையடுத்து அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள பல்வேறு நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திருச்சி ஆர்.மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகி சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றியவர் மனோகரன். அதனால். அதிமுக ஆட்சியில் மனோகரனை அரசு கொறடாவாக ஜெயலலிதா நியமித்தார்.
அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மனோகரன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியில் முக்கியபொறுப்புகளை வகித்த மனோகரன் 2021 தேர்தலில் அமமுக சார்பில் திருச்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.