சென்னை: 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக வரும் 24 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"கடந்த வெள்ளிக்கிழமை (21-4-2023) அன்று தமிழக சட்டமன்றத்தில் "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)” தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழக அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழகத்திற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.