"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய்களைத்தான் அறிவித்தோம்" என்ற திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலம், இந்நாள் முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சட்டப்படி நடக்காதவர்கள் என்பதன் சாட்சியம்.
ஆர்.கே.நகர் தொகுதியிலும் சட்டத்துக்குப் புறம்பாக 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தார்கள் இவர்கள் என்றுதான் தேர்தலையே நிறுத்தியது தேர்தல் ஆணையம். ஆனால் இக்குற்றங்களில் நடவடிக்கையே இல்லாததால் மோடி அரசும் இதில் உடந்தையே.
இவ்வாறு, சட்டப்படி நடந்துகொள்ளாத மாநில, மத்திய அரசுகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "நாட்டுக்கும் அரசியல் சட்டத்துக்கும் நெஞ்சறிய நேர்மையுடன் நடந்துகொள்வேன்" என்பதுதான் அமைச்சர்கள், ஆளுநர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் குடியரசுத்தலைவர் எடுத்துக் கொள்ளும் பதவியேற்பு உறுதிமொழியின் சாரம்.
அந்த உறுதிமொழிக்கேற்ப அதாவது சட்டப்படியாக அவர்கள் நடந்துகொள்ளாத பட்சத்தில் அது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டது வரை, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து தாங்கள் அறிவித்தவை அனைத்துமே “பொய்கள்” என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
இத்தனை நாட்களாக இந்த “உண்மை”யைச் சொல்லாத இவர், ஜெயலலிதா இறந்து ஏறத்தாழ ஓராண்டு ஆகும் தறுவாயில் “ஒப்புதல் வாக்குமூலம்” அளிப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?
அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைவருமே, “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; ஆனால் அந்த விசாரணையை தமிழக அரசோ, தமிழக அரசு ஏற்பாடு செய்யும் விசாரணை அமைப்போ நடத்தக்கூடாது; தமிழக அரசுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்புதான் விசாரணை நடத்த வேண்டும்” என்றுதான் சொல்லி வந்தனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தனது புரட்சித் தலைவி அம்மா அஇஅதிமுகவை சசிகலாவின் அம்மா அஇஅதிமுகவுடன் இணைப்பதற்கு “ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்” என்றே நிபந்தனை விதித்தார்.
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்யாமல், “ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும்” என்று வெறும் அறிவிப்பையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட, மறுபேச்சு பேசாமல் தன் கட்சியை சசிகலா கட்சியோடு இணைத்துக் கொண்டார் பன்னீர்செல்வம்.
இப்போது அம்மா அஇஅதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனின் கை ஓங்கிவிட, அவர் சார்பு 18 எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட, ஆட்சி போய்விடும், ஆதாயமும் போய்விடும் என்ற அச்சத்தில் தினகரன் மற்றும் சசிகலா தலைமை மீது பழியைப் போட்டு இழப்பை சரிக்கட்டிவிடலாம் என்ற நப்பாசையிலேயே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் சீனிவாசன்.
ஆனால் இதை எதிர்கொள்ள தினகரன் தரப்பினர் தயார்; “சிபிஐ விசாரணை வையுங்கள்; உண்மை அதில் வெளிவரட்டும்” என்கின்றனர் நெஞ்சுயர்த்தி!
பழனிச்சாமி அன் கோவிடமிருந்து இதற்குப் பதிலில்லை என்பதுதான் உண்மை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் நடந்தது என்ன?
நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை வருமான வரித்துறை சோதனை போட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.63 லட்சம் வாக்காளர்களில் 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணம் சிக்கியது.
அதில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்கள் இருந்தன: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜு, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் ராஜ்ய சபா எம்.பி ஆர்.வைத்தியலிங்கம்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தலைமைச் செயலாளரும், காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களும் சட்டப்படியான தங்கள் கடமையை சரியாகச் செய்யவில்லை.
தலைமைச் செயலாளரும், காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களும் தங்கள் கடமையை சரிவரச் செய்திருந்தால் மேற்கண்ட அமைச்சர்கள் 11 பேரும் இந்நேரம் பதவியில் இருக்கமாட்டார்கள்.
ஆக சட்டத்துக்குப் புறம்பாகவே காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஜெயலலிதா எதிர்த்துவந்த மோடியின் மக்கள் விரோதத் திட்டங்களை நிறைவேற்றுவதால் பழனிச்சாமி அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் மத்திய அரசும் துணைபோகிறது.
எனவே சட்டப்படி நடந்துகொள்ளாத இத்தகைய மாநில, மத்திய அரசுகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" எனக் கூறியுள்ளோர்.