சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யை தொடர்புகொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை தொடர்புடைய கிராம சபையின் வாயிலாக சமூக தணிக்கை செய்திடும் பணியானது தமிழ்நாடு சமூகத் தணிக்கை சங்கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான புகார்களை தெரிவித்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அலுவலரை நியமிக்கவும், இதன் பொருட்டு குறைகளை தெரிவிப்பதெற்கென கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மாநில சமூக தணிக்கை சங்கத்தைச் சார்ந்த இணை இயக்குநர் (தெற்கு மண்டலம்) மாநில குறை தீர்க்கும் அலுவலராகவும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட வள பயிற்றுநரை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலராகவும் நியமித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யை தொடர்புகொள்ளுமாறும், மேலும் இது தொடர்பான மாவட்ட வாரியான குறைதீர்க்கும் அலுவலர்கள் குறித்த விபரங்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை tnrd.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.