தமிழகம்

முதல்வர் கோப்பைக்கான பரிசு தொகை வழங்கவில்லை - காலம் கடத்தும் விளையாட்டு ஆணையம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளி ஆகிய 5 பிரிவினருக்கு மாவட்ட அளவில் கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டன. இதில் 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு தடகளத்தில் முதல் பரிசாக ரூ.3,000, 2-வது பரிசாக ரூ.2,000, 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். அதேபோல் இரட்டையர், குழு போட்டிகளில் முதல் பரிசு பெறும் அணியில் இடம் பெறுவோருக்கு தலா ரூ.3,000, 2-வது பரிசுபெறும் அணியில் இடம் பெறுவோருக்கு தலா ரூ.2,000, 3-வது பரிசு பெறும் அணியில் இடம் பெறுவோருக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், 2 மாதங்களாகியும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவில்லை. ஏற்கெனவே இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சில மாவட்டங்களில் போட்டிகள் முடிக்கப்படாமல் உள்ளன. அது முடிந்த பிறகு பரிசுத் தொகை வழங்கப்படும்’ என்றனர்.

ஆனால், அதன்பிறகு ஒரு மாதமாகியும் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. நிதி ஒதுக்கியும் பரிசுதொகை வழங்காமல் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காலம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT