திருவள்ளூர்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி பழங்குடியின மக்களிடையே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
பென்னலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு நேற்று சென்ற, பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “யாருக்காக உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். பள்ளி கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
5 நாட்கள் பள்ளிகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க” என பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்து வரும் பொதுமக்கள் மட்டுமல்ல, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் காவல் உதவியாளர் பரமசிவத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.