கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறைபிடித்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அன்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே வலையை விரித்து மீன்களுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, அதிலிருந்து 20 மீனவர்களை சிறைபிடித்தனர். இதில் இரண்டு படகு ராமேஸ்வரத்தையும் மற்ற இரண்டு விசைப்படகுகள் மண்டபத்தை சார்ந்தது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலைமன்னார் கடற்படை தளத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் மீன்வளத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நீதிமன்றம் விடுமுறை என்பதால் திங்கள்கிழமை 20 தமிழக மீனவர்களையும் மன்னார் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகின்றது.
முன்னதாக, ஜூன் மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதல் 41 விசைப்படகுகளை கைப்பற்றி 127 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் 2 தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மூழ்கடிக்கவும் செய்துள்ளனர். அனுராதபுரம் சிறையில் 17 ராமேஸ்வரம் மீனவர்கள் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.