சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.24 கோடியே 34 லட்சத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், மீன் சந்தை உள்பட 14 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதன்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், ஒரு நீர்நிலை மேம்பாட்டுப் பணி, ஒரு மீன் சந்தை, ஒரு இறைச்சிக் கூடம் நவீன மயமாக்குதல், 3 பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல் என மொத்தம் 14 திட்டப் பணிகளுக்கு ரூ.23 கோடி, மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்படி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 2 பூங்கா, கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் அணுகு சாலையில் 1 பூங்கா, மணலி மண்டலத்தில் பொன்னியம்மன் நகர் 3வது தெருவில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, மணலி புதுநகர் 3வது தெருவில் திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, 35வது பகுதியில் 1 பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்தில் தமிழ் நகர், குறிஞ்சி நகர் ஆகிய இடங்களில் நடைபாதை மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய தலா 1 பூங்கா என மொத்தம் 8 பூங்காக்கள் அமைய உள்ளன.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் குளம் ரூ.2.99 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் 102 கடைகள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளுடன் ரூ.2.69 கோடியில் மீன் சந்தை புதிதாக அமைக்கப்பட உள்ளது. சைதாப்பேட்டை இறைச்சிக்கூடம் 2008-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது ரூ.1.43 கோடியில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளது.
சிறந்த கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டுகள், நூலகம், பசுமை வளாக வசதிகள் மற்றும்கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரம்பூரில் மார்க்கெட் தெரு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் புதிய காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 3 புதிய கட்டிடங்கள் ரூ.12.95 கோடியில் கட்டப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.