சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பதில் அளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
ஏழை சிறுபான்மையினருக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் மின்மோட்டாருடன் கூடிய 2,500 தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். உலமாக்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும், விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
ரூ.1,000 கல்வி உதவித் தொகை
மேலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம்வகுப்பு வரை படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000கல்வி உதவித்தொகை வழங்கப்படும். சென்னை, கோவை மாவட்டங்களில் ரூ.81 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் தொடங்கப்படும். சென்னை ராயப்பேட்டையில் சிறுபான்மையினர் கல்லூரி மாணவிகள் விடுதிக்கு ரூ.6 கோடி 7 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்படும். கோவை, திருச்சி மாவட்டங்களில் தலா ஒரு முஸ்லிம் மகளிர்உதவி சங்கம் ரூ.2 லட்சத்தில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.