தூத்துக்குடி: ‘தமிழ் வேதம்’ என போற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களுக்கான உரை அடங்கிய சுவடி, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பதோடு, அவற்றை நூலாக்கும்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையில் சுவடியியல் பணியாளர்கள் 12 பேர்பணியாற்றி வருகின்றனர். இக்குழுவினர் தமிழகத்தில் 199 கோயில்களில் கள ஆய்வு செய்து ஏராளமான சுவடிகளை கண்டறிந்துள்ளனர். ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கள ஆய்வுசெய்தபோது, அரிய ஓலைச்சுவடி கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து தாமரைப்பாண்டி யன் கூறியதாவது: இக்கோயிலில் 19 சுவடி கட்டுகள் கண்டறியப்பட்டன. இச்சுவடிக் கட்டுகளில் ஒன்றில் தமிழ் வேதம் என்றுபோற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலின் இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து பாடல்களுக்கான உரை இடம் பெற்றுள்ளது. சற்று சிதைந்த நிலையில் இருப்பதால் உரை முழுமையற்று காணப்படுகிறது. எனினும் இச்சுவடி ஆய்வுக்குரிய அரிய சுவடி ஆகும்.
மேலும், இக்கோயிலின் வெஞ்சினப் பண்டாரக் குறிப்புகள் அடங்கிய 18 சிறிய ஓலைச் சுவடிக் கட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இச்சுவடிகளில் கோயிலின் பழமை, வரவு செலவு கணக்குக் குறிப்புகள்உள்ளன. இச்சுவடிகள் பூச்சிகள்அரித்து செல்லரித்து காணப்பட்டன. அவற்றை பராமரித்துப் பாதுகாக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.