தமிழகம்

சகோதரரைபோல குடும்ப விவரங்களை விசாரித்தார்: பிரதமருடன் செல்ஃபி எடுத்த பாஜக தொண்டர் பெருமிதம்

செய்திப்பிரிவு

ஈரோடு: பிரதமர் நரேந்திரமோடி ஒரு சகோதரரை போல என் குடும்ப விவரங்களை விசாரித்தார், என ஈரோட்டைச் சேர்ந்த பாஜக தொண்டர் மணிகண்டன் தெரிவித்தார்.

சென்னையில் ஒருங்கிணைந்த விமான நிலைய முனையம், ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். மாலையில் கர்நாடகா சென்ற போது அவரை வழியனுப்பி வைக்க பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்.

இதில், மாற்றுத்திறனாளியான ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரும் மூன்று சக்கர வாகனத்தில் காத்திருந்தார். விமான நிலையம் அருகே பிரதமரை சந்திக்க மணிகண்டனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, அவரிடம் கட்சி வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், அவரின் விருப்பத்தின் பேரில் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பாஜக தொண்டருடன் பிரதமர் செல்ஃபி எடுத்துக் கொண்டது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது

இதுகுறித்து, மணிகண்டன் கூறியதாவது: கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக பாஜகவில் உள்ளேன். தற்போது 26-வது வார்டு கிளைத் தலைவராக இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்கச் சென்றேன்.

அப்போது பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது பெயர், குடும்ப விவரங்களை பிரதமர் கேட்டறிந்தார். அப்போது, பிரதமரிடம், ‘நான் உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்கலாமா’ என்று கேட்டேன். அதற்கு பிரதமர் மோடி, ‘தாராளமாக எடுக்கலாம்’ என்று கூறி, எனது செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்தார். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஒரு சகோதரரைப் போன்று என்னிடம் உரிமையோடு, குடும்ப விவரங்கள் குறித்து பிரதமர் விசாரித்தார். மேலும், எனது கட்சிப் பணியையும் பாராட்டினார்.

இதற்கு ஏற்பாடு செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்று அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்றார்.

SCROLL FOR NEXT