தமிழகம்

மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு உடல் பரிசோதனை முகாம்: ஜூலை மாதம் வரை நடத்த ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் மருத்துவமனை மூலம் ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்த மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக நிர்வாக உயரதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது.

அறக்கட்டளை மூலம்.. இது தவிர்த்து மருத்துவமனைகளில் பெறும் சிகிச்சைக்கான தொகையும் ரசீது அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது மதுரையில் உள்ள அறக்கட்டளை மூலம் ஓட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய மேலாண் இயக்குநர் அனுமதியளித்துள்ளார்.

அதன்படி வரும் 11-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை 31 பணிமனைகள், 2 தொழிற்கூடங்கள் மற்றும் தலைமையகத்தில் பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை நடைபெறவுள்ளது. இதில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

          
SCROLL FOR NEXT