மதுரை: வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோ எடுத்து வெளியிட்டதாக பிஹார் யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். அவர்களது உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை போன்ற தகவல்களுடன் போலியான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த போலியான வீடியோ வெளியிட்ட நபர் தொடர்பாக உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் பிஹார் சென்று விசாரணை நடத்தி யூடியூபரான மணீஷ் காஷ்யப் (35) என்பவரை கடந்த வாரம் கைது செய்தனர். அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஏப்.3 வரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.
அவரை மீண்டும் காவலில் எடுக்க போலீஸார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால், நீதிபதி அனுமதி மறுத்து ஏப்.19 வரை மணீஷ் காஷ்யப்பை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, யூடியூப்பர் மணீஷ்காஷ்யப் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மதுரை எஸ்.பி. சிவபிரசாத் நேற்று தெரிவித்தார்.