சென்னை: கடலூரைச் சேர்ந்தவர் மோனிஷா(24). இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்றுமுன்தினம் தோழிகளுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்புவதற்காக, திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்துக்கு சென்றார். திருவான்மியூர் செல்வதற்காக, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்தனர்.
மயிலாப்பூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த மோனிஷா திடீரென மயங்கி விழுந்தார். அவரது தோழிகளில் ஒருவர் செவிலியர் என்பதால், மோனிஷாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனாலும், மோனிஷாவுக்கு மயக்கம் தெளியவில்லை.
உடனே, மோனிஷாவை தோழிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் விரைந்து சென்று மோனிஷாவின் தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது, மோனிஷா மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் வாங்கிசாப்பிட்டதாகவும், அப்போது முதல் அவர் சோர்வாக இருந்ததாகவும், திருவான்மியூர் செல்வதற்காக ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் அவர் மயங்கி இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மோனிஷாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், "மூச்சுத்திணறல் காரணமாக, இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரித்து வருகிறோம்" என்றனர்.