பேரவையில் பேசிய ஓபிஎஸ் மற்றும் மா. சுப்பிரமணியன் 
தமிழகம்

கரோனா காலத்தில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம்: ஓபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா காலத்தில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) நீர்வளத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் நடைபெற்றது.

இதில், அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம், "கரோனா தொற்று காலத்தில் மருத்துவப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கிய உணவுகளுக்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து அறிய விரும்புகிறேன்."என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நியாயமான கட்டிடத்தில், நியாயமான உணவுகளை வழங்கிய அனைவருக்கும் பில் தொகை வழங்கப்பட்டுவிட்டது. அநியாயமான முறையில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம் செய்ததாக வழங்கப்பட்ட பில்கள் மட்டுமே இதுவரை வழங்கப்படவில்லை. அதுவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் உணவைத் தரமாக வழங்கி இருந்தால் தொகை உறுதியாக வழங்கப்படும்." என்று கூறினார்.

SCROLL FOR NEXT