சென்னை: பணிப் பாதுகாப்பை உறுதி செய்தல், பதிவுத்துறையில் ஏற்கெனவேதனியார் மூலம் செயல்படுத்தும் ஒப்பந்த, வெளிமுகமை வேலைகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் மு.மகேஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி, புரமோட்டர் அல்லாத ஏழை மக்கள் மனைகளை பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். பணிமாறுதலுக்கான பொது கலந்தாய்வை ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்த வேண்டும், தற்போது 100 சார்-பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சனிக்கிழமை வேலை நாளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
சார்-பதிவாளர் நிலையில் உதவியாளர்கள் பதிவு பணியை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் என்றஅடிப்படையில் சார்-பதிவாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.