இடிந்து விழுந்த வீடு 
தமிழகம்

கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கந்தசாமி இன்று (மார்ச் 25 ஆம் தேதி) காலையில் வெளியே சென்றுவிட்ட நிலையில், காலை 6.30 மணியளவில் லட்சுமி காபி போடச் சென்றபோது திடீரென்று வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதில் இடிபாடுகளில் சிக்கிய லட்சுமி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீஸாருடன் அக்கம் பக்கத்தினர் இணைந்து லட்சுமி உடலை மீட்டனர். இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். 50 ஆண்டுகள் பழமையான வீடு என்பதால் திடீரென மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT