கோவை: கோவையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதல் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருந்த மர்ம நபர், அந்தப் பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மர்ம நபரை அடித்துப் பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள், ஆசிட் தாக்குதல் நடத்திய நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக, மனைவி கவிதா மீது கணவர் சிவக்குமார் ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது.