சென்னை: கண்புரை, விழித்திரை நோய்களால் பார்வையிழப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அமர் அகர்வால் தெரிவித்தார்.
‘ரெட்டிகான்’ எனப்படும் விழித்திரை சிகிச்சைகள் தொடர்பான சர்வதேச மருத்துவக் கருத்தரங்கை 13 ஆண்டுகளாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ கருத்தரங்க நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் மருத்துவர் அமர் அகர்வால், செயல் இயக்குநர் மருத்துவர் அஸ்வின் அகர்வால், முதுநிலை கண் மருத்துவ நிபுணர் மருத்துவர் சவுந்தரி, பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களும், துறைசார் வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
விழித்திரை சிகிச்சைகளில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள், புதிய முறைகள், மருந்துகளின் மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர் அமர் அகர்வால் கூறியதாவது:
கேமராவில் உள்ள படச்சுருள் போல கண்களுக்குள் விழித்திரை அமைந்துள்ளது. நாள்பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வயோதிகம் காரணமாக விழித்திரையில் ரத்தக் கசிவு, வீக்கம், துளை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதை முறையாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது ஓசிடி ஆஞ்சியோ முறை மூலம் நவீன ஸ்கேன் வசதிகள் மூலமாக விழித்திரை பாதிப்புகளை கண்டறியலாம். கண் சிகிச்சைகளுக்கு பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதை பரிமாறிக் கொள்ளவே இந்த கருத்தரங்கம் நடக்கிறது.
கண்புரை, விழித்திரை நோய்களால் பார்வையிழப்பு நேரிடுவது அதிகமாக உள்ளது. அதனைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களும், விழிப்புணர்வும் மிகக் குறைவாகவுள்ளது. அந்த பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்படலாம்.
40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எளிய முறையில் தங்களது பார்வைத் திறனை பரிசோதித்துக் கொள்ளலாம். ஒரு கண்ணை மூடிக் கொண்டு மற்றொரு கண்ணில் பார்க்கும் போது பார்வை மங்கலாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.