சென்னை: தெற்கு ரயில்வே, சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதத் தொகை வசூலித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை மண்டலத்தில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.55 கோடி அபராதத் தொகையை வசூலித்துள்ளார்.
இதேபோல், தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1.03 கோடி அபராதத் தொகையை வசூலித்து, நாடு முழுவதிலும் உள்ள பெண் டிக்கெட் பரிசோதகர்களில் அதிக அளவு அபராதத் தொகையை வசூலித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மூத்த டிக்கெட் பரிசோதகர் சக்திவேல் ரூ.1.10 கோடி அபராதத் தொகை வசூலித்துள்ளார். இதன்மூலம், இவர்கள் மூவரும் ஒரு கோடி கிளப்பில் உறுப்பினர்களாகி உள்ளனர் என்று தெற்கு ரயில்வே, சென்னை மண்டலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.