சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோரின் ஓய்வு வயதை குறைக்க பரிந்துரை செய்ய இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வயதை உயர்த்தி அவசர முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் காலையில் இருந்து இரவு வரை பேருந்துகளிலேயே இருக்க வேண்டியுள்ளது.
இதனால் நேரத்துக்கு சாப்பிட முடியாது, நடத்துநர் நாள் முழுவதும் நின்று கொண்டிருப்பது போன்றவை அவர்களது உடல் நலத்தை பாதிக்கும்.
சென்னையில் உள்ள பணிமனைகளில் ஆய்வு செய்யும்போது, 58 வயதில் ஓய்வு அளிக்க வேண்டும் என தொழிலாளர்களும் தொழிற்சங்கத்தினரும் கோரிக்கை வைத்தனர். இதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.