திருச்சி: வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மிளகுபாறையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் இன்று (பிப்.6) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இஎஸ்ஐ மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக செயல்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கிடைக்கின்றன.
தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பணி புரிந்து வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் பீகார் அரசு குழுவிடம், அம்மாநில தொழிலாளர்கள் கூறி உள்ளனர். அதனை அந்த அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை" என தெரிவித்தார்.