ராமதாஸ் | கோப்புப்படம் 
தமிழகம்

''A H3N2 காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் 

செய்திப்பிரிவு

சென்னை: A H3N2 காய்ச்சல் குறித்து தமிழ்நாடு அரசு மக்களிடம் விழிப்புடணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் A H3N2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

A H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா போன்றவை தாக்கக் கூடும். பலருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்படக்கூடும். மொத்தத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் எதிர்கொள்ள வேண்டும். கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் செல்லாமல் தாமாக ஆண்டி பயாடிக் மருந்துகளை எடுக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கையும் நூறைத் தாண்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தொடக்க நலவாழ்வு மையங்கள் வாயிலாக மருத்துவ பாசறைகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT