அரூர்: 1992-ல் நடைபெற்ற வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, வாச்சாத்தி கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
1992-ல் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, போலீஸார், வனத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின்போது கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பழங்குடியினப் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக 1995-ல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீஸார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று 2011-ல் தீர்ப்பளித்தது. இதில் 4 ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வனத்துறையினர் 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி பி.வேல்முருகன் நேற்று நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி, சுற்றுப்புற கிராமப் பகுதிகளான கலசப்பாடி, அரசநத்தம் கிராமங்களுக்குச் சென்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் வனம், வருவாய், காவல், நீதித் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.