சென்னை: சென்னை தரமணியில் `அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு பேராபத்து' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சமூக நீதி, சுதந்திரம்,சமத்துவம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுருக்கமாக முன்னுரையில் தரப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், இந்த முன்னுரியில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள கூறுகளை மாற்றாமல், சட்டம் இயற்றிக் கொள்ளலாம்.
ஆனால் அடிப்படைக் கூறுகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், பன்மைத்துவம் போன்றவற்றைத் தகர்க்கும் முயற்சியில், ஆட்சியில் இருப்பவர்களே ஈடுபடுகின்றனர். அதனாலேயே அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து என்கிறோம்.
தேசிய கல்விக் கொள்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய அரசியலில் இருந்து விடுபட்டு, ஜனநாயக இந்தியாவைக் கட்டமைக்கும் போராளிகள் என்ற உணர்வோடு சட்டம் பயில வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார். சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.