தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் | வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இன்றி கிராம மக்கள் சிரமம்

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திரா யிருப்பு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் கிராமப்புற மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

வத்திராயிருப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. தாலுகா தலைமை மருத்துவமனையான இங்கு பொது மற்றும் மகப்பேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

90 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையில் மகளிர் பிரிவு கட்டிடம் சேதமடைந்ததால், பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாலும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர்.

இங்கு 6 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வாரம் ஒருமுறை எலும்பு முறிவு மருத்துவர் வத்திராயிருப்பு மருத்துவமனை வருகிறார்.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 1956-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் மகப்பேறு பிரிவு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இம்மருத்துவமனையில் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்துக்காக வருகின்றனர். சுகப்பிரசவம் என்றால் மட்டும் முதுநிலை மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தாலோ அல்லது ஏதாவது பிரச்சினை என்றாலோ வில்லிபுத்தூர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கின்றனர்.

இதனால் மக்கள் அலைக் கழிக்கப்படுவதுடன், இரவு நேரத் தில் ஏதாவது பிரச்சினை ஏற் பட்டால் தாய் மற்றும் சேய்க்கு உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

வத்திராயிருப்பு அரசு மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவரை நியமித்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT