மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் தாமோதர் தாஸ் மோடி பங்கேற்றார். உடன் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் உள்ளிட்டோர். 
தமிழகம்

பங்காரு அடிகளார் 83-வது பிறந்த நாள் விழா: ரூ.3 கோடி உதவிப் பொருட்கள் வழங்கல்

செய்திப்பிரிவு

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆன்மிக குருபங்காரு அடிகளாரின் 83-வது பிறந்தநாள் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவை ஒட்டி நேற்று அதிகாலை 3 மணிக்குஆதிபரா சக்தி அம்மனுக்கு மங்கல இசையுடன் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை தங்க ரதத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டசெவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவரைபிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் தாமோதர் தாஸ் மோடி சந்தித்து ஆசி பெற்று, ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டார்.

பின்னர் நேற்று மாலை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அரங்கில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கி,பேருரையாற்றினார். தலைமைசெயல் அதிகாரி அகத்தியன், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் தேவி வரவேற்றார். விழா மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இருசக்கர வாகனம், சைக்கிள், கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் சைக்கிள் உள்ளிட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 115 விதமான நலத்திட்ட உதவிப் பொருட்களை 3100 ஏழை எளியவர்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கினார்.

முன்னதாக பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழாவையொட்டி ஜூம் செயலி மூலம் சுமார்15 நாடுகளிலிருந்து 8,310 பக்தர்கள் ஒரே நேரத்தில் 2.42 கோடி முறை மந்திரங்களை உச்சரித்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனைக்கான விருதை ஆன்மிக குரு பங்காரு அடிகளாரிடம் விழா மேடையில் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டைலர் கிராப்ட் வழங்கினார். இன்று ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT