சென்னை: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், வரும் மார்ச் 4 அன்று வாச்சாத்தி கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த 1992-ம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக்கூறி தமிழக போலீஸார், வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பழங்குடியினத்தவர்களான அக்கிராம மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதில் பல பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளரான சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு சிபிஐ போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் உயிருடன் உள்ள 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்யன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார். மேலும், வரும் மார்ச் 4 அன்று சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.