சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்குகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில்கடந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்காரணமாக ஏராளமான சாலைகள் பழுதாயின. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.1171 கோடியில்1860 கிமீ நீள சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குஅரசும் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது.
சிங்காரசென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.41கோடியே 65 லட்சத்தில், 362 சாலைகளை 62 கிமீ நீளத்துக்கு அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரரை இறுதிசெய்து, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்று (பிப்.27) தொடங்குகிறது.
இது மட்டுமல்லாது பல்வேறு நிதி ஆதாரங்களின்கீழ் ரூ.50 கோடியில், 100 கிமீ நீளத்தில் 568 சாலைகளை சீரமைப்பதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.