சென்னை: சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் உள்ள ஆர்ஆர் திரையங்கத்தில் நேற்று காலை, சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் திரையிடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக திரையரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதைக் கண்ட மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் மாணவர்கள் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால், திரையிடல் நிகழ்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த திரையரங்கத்தில் இதுவரை 3 முறை புதுப் பித்தல் பணி நடந்துள்ளது.
கடைசியாக 2019-ம் ஆண்டு புதுப் பித்தல் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரி திரையரங்கத்தில் மேற்கூரை இடிந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.