தமிழகம்

தேடல் குழுவில் மீண்டும் ராஜினாமா? - மதுரை பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் தொடரும் ‘இழுபறி’

என்.சன்னாசி

தேடல் குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவர் மீண்டும் ராஜினாமாவுக்கு தயாராகும் சூழலால் மதுரை காமராஜர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிப்பதாக பல்கலை. பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டாக இப்பல்கலைக் கழகம் துணை வேந்தர் இன்றி செயல்படுகிறது. ஏற்கனவே கன்வீனர் முருகதாஸ் தலைமையிலான தேடல் குழு பரிந்துரையில் ஒருமித்த கருத்துக் கொண்ட ஒருவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் குழுவில் இடம் பெற்ற செனட் உறுப்பினர் ராமசாமி 2016 பிப்., 10ல் ராஜினாமா செய்தார். 8 மாதத்திற்கு பின் நவ.,30-ல் தேடல் குழுவிற்கான புதிய சென்ட் உறுப்பினராக ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வுக்குழுவினரும் புதிய துணைவேந்தருக்கான பரிந்துரை பட்டியலை அனுப்பி 3 மாதத்திற்கு மேலாகியும் இன்னும் முடிவு தெரியவில்லை. புதிய துணைவேந்தரை நியமிக்க, ஏற்கனவே தேடல் குழுவுக்குள் ஒருமித்த கருத்து இன்றி தோல்வி உருவானது போல் மீண்டும் அதுபோன்ற சூழல் இருப்பதாக பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து பேராசிரியர் ஒருவர் கூறியது: கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னையில் உயர்கல்வித்துறை சார்பில், நடந்த ஆய்வில் புதிய துணைவேந்தர் நியமனம் குறித்து பேசப்பட்டு இருக்கிறது. இதில் தேடல் குழுவில் இடம்பெற்ற மூவரும் தலா 3 பேரை பரிந்துரைத்த பட்டியலில் இருந்து, மூவர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவர் சேர்ந்து ஒருவரையும், ஒருவர் மட்டும் வேறொரு நபரையும் சிபாரிசு செய்து இருப்பதாக தெரிகிறது. தேடல் குழுவுக்குள் முரண்பட்ட நிலையில், மீண்டும் துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி நிலையே தொடர்கிறது.

இருவர் சிபாரிசு செய்யும் நபரை நியமிக்கும் சூழல் உருவானால் ராமசாமியை போன்று மீண்டும் ஒரு ராஜினாமா அரங்கேற வாய்ப்புள்ளது. அப்படி யொரு நிலை உருவானால் துணைவேந்தருக்கு நியமனம் இன்னும் எவ்வளவு நாள் தள்ளப்போகுமோ தெரியவில்லை. துணைவேந்தர் நியமனத்தில் உயர்கல்வி மற்றும் தேடல் குழுவினர் ஆர்வமின்மையால் பாதிக்கபோவது மாணவர்களும், பல்கலை நிர்வாகமுமே, என்றார்.

தேடல் குழுவுக்குள் முரண்பட்ட நிலையில், மீண்டும் துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி நிலையே தொடர்கிறது. இருவர் சிபாரிசு செய்யும் நபரை நியமிக்கும் சூழல் உருவானால் ராமசாமியை போன்று மீண்டும் ஒரு ராஜினாமா அரங்கேற வாய்ப்புள்ளது.

          
SCROLL FOR NEXT