கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ''துணிவு மற்றும் வீரசாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் இந்த விருதில் அடங்கும். துணிச்சலான மற்றும் வீரசாகசச் செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெற தகுதியுள்ளவர்.
2017-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர் பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009க்கு 30.06.2017-க்கு முன்பாக அனுப்பிவைக்கப்படவேண்டும்.
விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.