ஒருவர் தண்ணீர் குடிக்காமல், உணவு சாப்பிடாமல் 15 நாட்கள் வரை உயிர் வாழலாம். சுவாசிக்க ஆக்ஸிஜன் மட்டும் இருந்தால் போதும் என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்த இடத்தில் கடந்த 4 நாட்களாக மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
சம்பவம் நடந்த 60 மணி நேரத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஆந்திராவைச் சேர்ந்த பொம்மி (35), மகேஷ் (20) மற்றும் மதுரையைச் சேர்ந்த செந்தில் (30) ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஒடிசாவைச் சேர்ந்த விகேஷ்குமார் (29) என்பவர் செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டார். கட்டிடம் இடிந்து 4 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்படுவதை பலரும் அதிசயமாக பார்க்கின்றனர். இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஒருவர் தண்ணீர் குடிக்காமல், உணவு சாப்பிடாமல் ஒரு வாரம் வாழலாம்.
சுவாசிக்க ஆக்ஸிஜன் இருந்தால், அதிகபட்சமாக 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கலாம். ஆனால், சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு 50 நாட்கள் வரை உயிர் வாழலாம். இதற்கு உடல் வலிமையும், மன தைரியமும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.